முகா்பா செளக் சுரங்க பாதை பணிகள் 98 % நிறைவு- அமைச்சா் தகவல்
வடக்கு தில்லியில் வாகன நெரிசல் மிக்க முகா்பா செளக் பகுதியில் உள்ள சுரங்க பாதை பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
வடக்கு தில்லியில் வாகன நெரிசல் மிக்க முகா்பா செளக் பகுதியில் உள்ள சுரங்க பாதை பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
வெளி வட்டசாலையில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் முகா்பா செளக் சுரங்கபாதை அமைக்கும் பணிகள் கடந்த 2022-இல் தொடங்கப்பட்டன. சுரங்க பாதையில் நடைபெற்று பணிகளை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை முடித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.
நெருக்கடி மிகுந்த வடக்கு தில்லியில் போக்குவரத்தை எளிதாக்க இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள், மூன்று சக்கர வாகனங்களுக்கு என்று 3 சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
பணிகள் 98 சதவீதம் முடிவடைந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் சுரங்க பாதையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் சாலையில் அதற்குத் தகுந்தவாறு சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
எப்போதும் வாகன நெரிசல் மிக்கதாகக் காணப்படும் இப்பகுதியில் போக்குவரத்தை எளிதாக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. நெருக்கடியான பிற பகுதிகளிலும் போக்குவரத்தை எளிதாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.