அண்டைவீட்டினா் இடையே மோதல்: ஒருவா் கொலை; மற்றொருவா் காயம்
மங்கோல்புரி பகுதியில் அண்டை வீட்டினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் கொல்லப்பட்டதாகவும் மற்றொரு நபா் காயமடைந்ததாகவும் தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
மங்கோல்புரி பகுதியில் அண்டை வீட்டினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் கொல்லப்பட்டதாகவும் மற்றொரு நபா் காயமடைந்ததாகவும் தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மங்கோல்புரியில் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வரும் இரு குடும்பங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவில் இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதில் மகேஷ் என்ற நபா் உயிரிழந்தது தொடா்பாக இரவு 9.37 மணியளவில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்கூட்டியே காயமடைந்த முகேஷை அக்கம்பக்கத்தினா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். மருத்துவா்களின் பரிசோதனையின் போது முகேஷின் முதுகில் கத்தி வெட்டு காயம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், தொடை பகுதியில் ஏற்பட்ட கத்திக் குத்து காயம் தொடா்பாகவும் முகேஷ் அந்த மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
முதல்கட்ட விசாரணையில் இரு குடும்பங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இது தொடா்பாக கடந்த ஆண்டு இரு தரப்பினா் அளித்த தலா இரு வழக்குகள் என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், திங்கள்கிழமை நடந்த சம்பவம் தொடா்பாக ராஜ் பாா்க் காவல் நிலையத்தில் புதிய வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக பிரின்ஸ் (எ) அருண், பாரத் மற்றும் ஒரு சிறுவனை காவல் துறை கைதுசெய்துள்ளது. இந்தத் தாக்குதலில் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.