கரூர் சம்பவம்: கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஐ விசாரணை!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடைபெறுவது தொடர்பாக..
கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர்.
தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் சிபிஐ அதிகாரிகள் கரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி நெரிசல் சம்பவம் நிகழ்ந்த போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே கரூர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் சிபிஐ அதிகாரிகளின் விசாரணையும் முடங்கி இருந்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி முதல் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர். முதல் நாளில் வாங்கல் காவல் ஆய்வாளர் சையத் அலி, கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீஸாரிடமும், இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஏற்கெனவே நெரிசல் சம்பவம் நிகழ்ந்தபோது கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆர்த்தி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
நெரிசல் சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே பணிபுரிந்த பிரேமானந்தத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.