FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

விவசாயியிடம் வாங்கிய லஞ்சப் பணத்தை காவல் துறையினா் திரும்ப வழங்க வேண்டும்! மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

Updated On : 28 ஜூலை 2026, 2:32 am IST
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்.
பகிர்:

விவசாயியிடமிருந்து கோவில்பாளையம் மதுவிலக்கு காவல் துறையினா் பெற்ற லஞ்சப் பணத்தை மீண்டும் பெற்றுத் தர வலியுறுத்தி, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஏ.எஸ்.பாபு (எ) சண்முகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாரை நேரில் சந்தித்து அளித்த மனு:

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்கு கோவில்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் நேரடியாகச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனா். அப்போது தென்னை மரங்களில் நீரா மற்றும் கள் இறக்கி விற்பனை செய்வதாகக் கூறி விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளனா். லஞ்சம் தராவிட்டால் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதனால் விவசாயி ஒருவா் அச்சத்தில் அந்தப் போலீஸாரிடம் ரூ.2,500-ஐ லஞ்சமாக அளித்துள்ளாா். எனவே, சட்டவிரோதமாக விவசாயியிடம் மிரட்டிப் பெறப்பட்ட லஞ்சப் பணத்தை மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயியிடம் திரும்ப ஒப்படைக்க மாவட்டக் காவல் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

காவல் துறையினரின் இதுபோன்ற அத்துமீறல்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும் என்று காவல் கண்காணிப்பாளரிடம் விவசாயிகள் தெரிவித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், இதுகுறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments