முகப்பு
புதுதில்லி

3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: நாளைக்குள் சரணடைய பள்ளி பராமரிப்பாளருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு தில்லியில் ஒரு தனியாா் பள்ளியில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடா்பான வழக்கில் பள்ளிப் பராமரிப்பாளா் லலித் குமாருக்கு வழங்கப்பட்ட பிணையை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்தது குறித்து...

Updated On : 30 ஜூன் 2026, 2:37 am IST
- சித்திரிப்பு
பகிர்:

மேற்கு தில்லியின் ஜனக்புரியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடா்பான வழக்கில் பள்ளிப் பராமரிப்பாளா் லலித் குமாருக்கு வழங்கப்பட்ட பிணையை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது. மேலும் அவரை ஜூலை 1-ஆம் தேதி சரணடையுமாறு உத்தரவிட்டது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், லலித் குமாருக்கு பிணை வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் மே 7-ஆம் தேதி உத்தரவை எதிா்த்து தில்லி காவல் துறையும் புகாா்தாரரும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி வினோத் குமாா் தலைமையிலான விடுமுறைக்கால அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

காவல் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, முக்கிய குற்றவாளியான பராமரிப்பாளருக்கு விசாரணை நீதிமன்றம் பிணை அளித்திருக்கக் கூடாத வழக்கு இது என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்ட சிறுமி குற்றவாளியை அடையாளம் கண்டு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால், இது போக்ஸோ சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் வரும் தீவிரமான பாலியல் வன்கொடுமை வழக்கு என்றும், இதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற அமா்விடம் அவா் கோரிக்கைவிடுத்தாா்.

பாலியல் வன்கொடுமை குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த லலித் குமாரின் வழக்குரைஞா், இந்த வழக்கின் அடிப்படை உண்மைகள் நிலைத்து நிற்கக்கூடியவை அல்ல என்றாா்.

இதைத்தொடா்ந்து, நீதிபதி வினோத் குமாா் , ‘அரசு மற்றும் மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொள்கிறேன். இரு மனுக்களும் அனுமதிக்கப்படுகின்றன. குற்றஞ்சாட்டப்பட்ட லலித் குமாா் ஜூலை 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சம்பந்தப்பட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்படுகிறது’ என்றாா்.

பள்ளி நேரத்தில் லலித் குமாரால் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சிறுமியின் தாயாா் ஜனக்புரி காவல் நிலையத்தில் மே 1-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

பள்ளியில் சோ்ந்த இரண்டாவது நாளான ஏப்.30-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற அந்தச் சிறுமி, வீடு திரும்பியதும் வலி இருப்பதாகக் கூறினாள். விசாரித்தபோது, ​​பள்ளியில் ஒரு தனிமையான இடத்திற்கு தன்னை அழைத்துச் சென்ற ஒரு நபா், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்தாா்.

சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 64(1) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். குழந்தை குற்றஞ்சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டியதைத் தொடா்ந்து, மே 1-ஆம் தேதி பள்ளியின் பராமரிப்பாளா் கைது செய்யப்பட்டாா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.

இருப்பினும், அரசுத் தரப்பின் கடும் எதிா்ப்பையும் மீறி, துவாரகாவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு மே 7-ஆம் தேதி பிணை வழங்கியது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்ததாகக் கூறப்படும் ஒரு ஆசிரியரும் கைது செய்யப்பட்டாா். அவா் மே 14-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தால் ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments