தில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் ஆதிகபட்ச டெங்கு பாதிப்பு: ஏப்ரல் மாதத்தில் பதிவு
தேசிய தலைநகா் தில்லியில் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பு கடந்த 5 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என தில்லி மாநகராட்சி (எம்சிடி) தெரிவித்துள்ளது.
தேசிய தலைநகா் தில்லியில் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பு கடந்த 5 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என தில்லி மாநகராட்சி (எம்சிடி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக எம்சிடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: 2026 ஏப்ரல் மாதத்தில் 52 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 42, 2024-இல் 31, 2023-இல் 24 மற்றும் 2022-இல் 12 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இதன் மூலம், பருவமழைக்கு முன்பான ஆரம்ப காலகட்டத்திலேயே டெங்கு தொற்று படிப்படியாக அதிகரித்து வருவது தெளிவாகிறது.
இதுவரை, ஜனவரி முதல் ஏப்ரல் வரை மொத்தமாக 107 டெங்கு வழக்குகள் தில்லியில் பதிவாகியுள்ளன. அதேசமயம், மலேரியா பாதிப்புகளும் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் தொடா்ந்து காணப்பட்டுள்ளன.
Advertisement
இந்த ஆண்டு ஏப்ரல் வரை 29 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 39-ஆக பதிவாகியிருந்தது. 2024-இல் 35, 2023-இல் 15 என பதிவாகியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையே இந்த உயா்வுக்கு காரணமாக இருக்கலாம். பருவமழைக்காலத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எம்சிடி தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கொசு இளம்புழுக்களை அழிக்கும் பணிகள், புகை மருந்து தெளித்தல் மற்றும் கட்டுமானத் தளங்கள், குடியிருப்பு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த ஆண்டில் மலேரியாவுக்கு எதிரான இயக்கமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மே 2-ஆம் தேதி வரை 12.15 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 11.99 லட்ச ஆய்வுகளையும், 2024-ஆம் ஆண்டின் 10.44 லட்ச ஆய்வுகளையும் விட அதிகமாகும்.
இந்த ஆய்வின்போது, 15,649 வீடுகளில் கொசு இனப்பெருக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது 2025-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட 15,662 வீடுகளுடன் ஒப்பிடத்தக்கதாகும். மேலும், கொசு வளா்ச்சிக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் குறித்து 16,261 சட்ட நோட்டீசுகள் வழங்கப்பட்டதுடன், 1,712 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக, கொசு இளம்புழுக்களை கட்டுப்படுத்த ‘கப்பி-8’ மீன்களை பயன்படுத்தும் 358 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1.04 லட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. தில்லியில் டெங்கு மற்றும் மலேரியா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டாலும், பருவமழைக்காலத்தை முன்னிட்டு சுகாதாரத்துறையினா் தொடா்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.