நாகர்கோவிலில் கழிவுநீரோடை கட்டுமானம் இடிந்து விழுந்தது
நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் கழிவுநீரோடைக் கட்டுமானம் இடிந்து விழுந்ததால் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக வார்டு உறுப்பினர் ஜி. காமராஜ் (காங்கிரஸ்) அறிவித்துள்ளார்.
நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் கழிவுநீரோடைக் கட்டுமானம் இடிந்து விழுந்ததால் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக வார்டு உறுப்பினர் ஜி. காமராஜ் (காங்கிரஸ்) அறிவித்துள்ளார்.
நாகர்கோவில் நகராட்சி 35-வது வார்டுக்கு உள்பட்ட கோட்டாறு செட்டித்தெரு பகுதியில் கழிவுநீரோடைப் பணி நடைபெறுகிறது. 2 நாள்களுக்கு முன் அமைக்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததாம். இதையடுத்து, தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக காமராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
செட்டித் தெருவில் கழிவுநீரோடை, தெருவில் டைல்ஸ் பதிக்கும் பணிக்கு ரூ. 22 லட்சம் ஒதுக்கப்பட்டது. பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதால் டைல்ஸ் பதிக்கும் பணி இப்போதைக்கு வேண்டாம் என நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தேன். எனவே, 360 மீட்டர் நீளத்துக்கு ரூ. 12 லட்சத்தில் கழிவுநீரோடை அமைக்கும் பணி நடைபெறுகிறது. பணி முறையாகவும் தரமாகவும் இருக்க வேண்டும் என ஒப்பந்ததாரர், நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருந்தேன்.
Advertisement
Advertisement
இந்நிலையில், 2 நாள்களாக நடைபெற்ற கான்கிரீட் கட்டுமானப் பணி ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. கான்கிரீட் தரமாக இல்லை எனத் தெரிந்துகொண்டேன்.
இதனால் நான் மக்களின் விமர்சனத்துக்கு உள்ளாக நேர்ந்துள்ளது. எனவே, எனது பதவியை நான் ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளிக்கவுள்ளேன் என்றார் அவர்.