எடத்துவா தூய ஜார்ஜியார் பேராலய பெருவிழா ஏப். 27இல் தொடக்கம்
கேரள மாநிலம், எடத்துவா தூய ஜார்ஜியார் பேராலயப் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 27 ) தொடங்குகிறது.
கேரள மாநிலம், எடத்துவா தூய ஜார்ஜியார் பேராலயப் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 27 ) தொடங்குகிறது.
இது குறித்து, சீரோ மலபார் கூரிய ஆயர் மார் செபாஸ்டின் வாணியப் புரக்கல், பேரருள்தந்தை ஜான் மணக்குந்நேல் ஆகியோர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் இயேசுவின் மீதும், திருச்சபையின் மீதும் கொண்ட விசுவாசத்துக்காக தன் உயிரைக் காணிக்கையாக்கி மறைசாட்சியாக மரித்தவர் தூய ஜார்ஜியார். இவர் உலகம் முழுவதும் மக்களால் நேசிக்கப்படுகிறார். அவருடைய விசுவாச வாழ்வு கிறிஸ்தவ மக்களுக்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இத்தகைய புகழ் பெற்ற தூய ஜார்ஜியாருக்கு எடத்துவாவில் பேராலயம் அமையப் பெற்றுள்ளது. இந்தப் பேராலயப் பெருவிழா ஏப். 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல்நாள் காலை 6 மணிக்கு நவநாள், திருப்பலி மற்றும் கொடியேற்றம் நடைபெறுகிறது. பேரருள்தந்தை ஜான் மணக்குந்நேல் கொடியேற்றுகிறார். காலை 7.30 மணிக்கு சீரோ மலபார் கூரிய ஆயர் மார் செபாஸ்டின் வாணியப்புரக்கல் திருப்பலி நிறைவேற்றுகிறார். 10 மணிக்கு அருள்தந்தை இக்னேஷியஸ் தமிழ் திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலையில் நவநாள், திருப்புகழ்மாலை, திருப்பலி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
மே 5 ஆம் தேதி நடைபெறும் ஆடம்பரத் திருப்பலியில் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் கலந்துகொள்கிறார். மே 7ஆம் தேதி திருப்பலியை கோட்டாறு மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் நிறைவேற்றுகிறார். மே 14 ஆம் தேதி எட்டாமிடம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அருள்தந்தையர் வர்கீஸ் புத்தன்புர, வில்சன் புன்னக்காலவாயில், மைக்கிள் நெல்வன்குழியில், ஆன்றனி தேவாரி உள்ளிட்டோர் செய்துவருகின்றனர் என்றனர்.
பேட்டியின்போது, நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் தாமஸ் பௌவத்துப் பறம்பில், தக்கலை மறைமாவட்ட தகவல்தொடர்புத் துறை ஜூனு ஆகியோர் உடனிருந்தனர்.