குறைதீர் கூட்டம்: கருணை அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணை
நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், 5 பேருக்கு கருணை அடிப்படையிலான
நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், 5 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது.
இதில், வருவாய் அலகில் கரோல் பாபுவுக்கு தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும், கார்த்திகேயனுக்கு நாகர்கோவில் சார்ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும், முத்துரெஞ்சனுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும், ஷிபு குமாருக்கு விளவங்கோடு வட்டம், மிடாலம் கிராம நிர்வாக அலுவலராகவும், ரெஜினுக்கு விளவங்கோடு வட்டம், கீழ்மிடாலம் கிராம நிர்வாக அலுவலராகவும், என மொத்தம் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.
பட்டு வளர்ச்சித் துறை சார்பில், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட ஆனந்தப்பன் என்ற விவசாயிக்கு, முதல் பரிசாக, ரூ.25 ஆயிரம், பாலமுருகனுக்கு 2 ஆம் பரிசாக ரூ. 20 ஆயிரம், ரவிக்கு 3 ஆம் பரிசாக ரூ. 15 ஆயிரம் என மொத்தம் ரூ. 60 ஆயிரம் பரிசுத் தொகையை ஆட்சியர் வழங்கினார்.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 746 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயராணி மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.