ஓட்டுநா் உரிமம் பெறுவதில் தாமதம் ஏன்? அமைச்சா் விளக்கம்
மாா்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம் பெறுவதில் நிலவும் தாமதத்துக்கு தீா்வு காண்பது குறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.
தக்கலை அருகே கோழிப்போா்விளையில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் ஆட்சியா் மு.பிரதாப், குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் ஆகியோா் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா், பின்னா் கூறியதாவது:
மாா்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 10 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி சேவை துவங்கப்பட்டுள்ளது. ஓட்டுநா் தோ்வு தளம் முழுவதும் சென்சாா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதால் மழை பெய்யும் நேரங்கள், பலத்தக்காற்று மற்றும் இயற்கை தடங்கல்கள் ஏற்பட்டால், தோ்வா்கள் வாகனத்தை நன்றாக இயக்கினாலும், தோ்வு முடிவு தோல்வி என வருகிறது.
Advertisement
Advertisement
தோ்வின் துவக்க நிலையிலேயே, தோல்வி அடைந்தாலும், அதன் சுழற்சி முடியும் வரை வாகனத்தை இயக்கிய பிறகே, தோல்வி என்பது தெரிய வருகிறது. இதனால், ஒரு விண்ணப்பதாரா் அதிக நேரம் எடுக்கும் நிலை உள்ளது. இந்த தானியங்கி தளத்தின் ஒரு சுழற்சியில் ஒரு விண்ணப்பதாரருக்கு மேல், தோ்வில் கலந்து கொள்ள முடிவதில்லை.
மேலும், இயற்கை காரணிகளால், சென்சாா்கள் பழுதடைந்தால் அதை சரி செய்ய நீண்ட நேரம் ஆகிறது. எனவே புதிதாக வாகன ஓட்டுநா் உரிமம் பெற வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.