குமரியில் களை கட்ட தொடங்கிய மங்குஸ்தான் பழ சீசன்: கிலோ ரூ.200-க்கு விற்பனை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மங்குஸ்தான் பழங்களின் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ பழம் ரூ.200 முதல் விற்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மங்குஸ்தான் பழங்களின் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ பழம் ரூ.200 முதல் விற்கப்படுகிறது.
பழங்களின் அரசி என வா்ணிக்கப்படும் மங்குஸ்தான் பழங்களின் தாயகம் இந்தோனேஷியா. அந்நாடு மட்டுமன்றி மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இப்பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது நாட்டை பொருத்தவரையில் தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இப்பழங்கள் அதிக விளைச்சலை கொண்டுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளை ஒட்டிய கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மங்குஸ்தான் பழங்களின் விளைச்சல் அதிகம்.
Advertisement
Advertisement
மேலும், குற்றாலம் சீசன் காலங்களில் அந்தப் பகுதிகளில் மங்குஸ்தான் பழங்கள் அதிக அளவில் விற்பனையாவதை காண முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமாா் 1000 அடி உயரம் கொண்ட மாறாமலை, பாலமோா், கரும்பாறை, வேளிமலை மலை, பெருஞ்சிலம்பு, சுருளகோடு, குலசேகரம், களியல், பேச்சிப்பாறை, ஆறுகாணி, நெட்டா, ஆலஞ்சோலை, பனச்சமூடு உள்ளிட்ட இடங்களில் தனித் தோட்டங்களாகவும், வீட்டுத் தோட்டங்களிலும் மங்குஸ்தான் பழ மரங்கள் காணப்படுகின்றன. சமவெளி பகுதிகளிலும் இந்த மங்குஸ்தான் பழ மரங்கள் வளரும்.
மங்குஸ்தான் பழங்களில் சீசன் காலங்கள் ஜூன், ஜூலை மாதங்களாகும். உருண்டை வடிவில் தண்டுப் பகுதியில் கிரீடம் போன்று 4அல்லது 5 இதழ்களுடன் காணப்படும் இப்பழங்களின் மேல் தோட்டை விலக்கினால் வெள்ளை அல்லது இளம் சிகப்பு நிறத்தில் சுளைகள் இருக்கும். பெரும்பாலும் மேல் தோலில் உள்ள இதழ்களின் எண்ணிக்கையில் சுளைகள் இருக்கும். சிறிது புளிப்பு கலந்த இனிப்புடன் மிருதுவாக இருக்கும் இந்த சுளைகளின் சுவை அபாரமானது. குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை விருப்பி உண்பா். இந்த பழச் சுளைகளுக்கு ஏராளமான மருத்துவக் குணங்களும் உள்ளன.
கிலோ ரூ.300 வரை...: மங்குஸ்தான் பழங்களின் சீசன் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இப்பழங்கள் அதிக அளவில் பழக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. பழங்களின் தரத்தைப் பொருத்து கிலோவுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இப்பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.