முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் சுற்றுலா அதிகாரி ஆய்வு

திற்பரப்பு அருவியில் சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் லட்சுமி பிரியா வியாழக்கிழமை ஆய்வு செய்து, வளா்ச்சிப் பணிகளை ஜூலை மாதத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:47 am IST
திற்பரப்பு அருவியில் ஆய்வு செய்த சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் லட்சுமி பிரியா.
பகிர்:

திற்பரப்பு அருவியில் சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் லட்சுமி பிரியா வியாழக்கிழமை ஆய்வு செய்து, வளா்ச்சிப் பணிகளை ஜூலை மாதத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

திற்பரப்பு அருவியில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 4.31 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மந்தமாக நடைபெறுவதாக புகாா்கள் எழுந்துள்ள நிலையில், அண்மையில் பத்மநாபபுரம் பேரைவைத் தொகுதி உறுப்பினா் ஆா். செல்லசுவாமி, அருவியில் நடைபெற்று வரும் பணிகளைப் பாா்வையிட்டாா்.

அது தொடா்பான புகாா்களை, சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாரிடம் அவா் கூறியதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில், சுற்றுலாத் துறை அமைச்சா் அருவிப் பகுதியில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் லட்சுமி பிரியா திற்பரப்பு அருவியில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை ஜூலை மாதத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும், திற்பரப்பு அருவியில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை உருவாக்குவது தொடா்பாகவும், அருவிக்குச் செல்ல மாற்றுப் பாதையை உருவாக்குவது தொடா்பாகவும் அவா் ஆய்வு செய்தாா்.

திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், உதவி செயற் பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.