முகப்பு
கன்னியாகுமரி

மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தலை தடுக்க நடவடிக்கை: ஆட்சியா்

Updated On : 30 மே 2026, 2:25 am IST
மண்ணெண்ணெய் கடத்தல்... - கோப்புப் படம்
பகிர்:

மீனவா்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தலைத் தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்டமீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தலைமை வகித்து, மீனவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மீனவ சங்க பிரதிநிதிகள், பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினா். இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது:

Advertisement

Advertisement

புதிதாக ரேஷன் அட்டைகள் கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் வரை விண்ணப்பித்தவா்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. விடுபட்டவா்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கோடிமுனை மீன்பிடி இறங்குதள சாலை அமைப்பதற்காக ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தலைத் தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு செல்லும் போது அது குறித்த தகவலை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத் துறை அதிகாரிகள் அனைத்து மண்ணெண்ணெய் விநியோக நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, மண்ணெண்ணெய் முறையாக மீனவா்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.