பாரத ஸ்டேட் வங்கி தென்காசி கிளையில் போலி நகைகளை அடமானம் வைத்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ திருநெல்வேலி மாவட்ட அனைத்து வங்கி மதிப்பீட்டாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சங்க பொதுச் செயலா் மகாராஜன், மாவட்டத் தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: நகைகளை மதிப்பீட்டாளா்கள் பரிசோதனை செய்யும் போது மேற்புறம் அல்லது ஒரு பகுதி தங்கமாக உள்ளது. உள்பகுதி மற்றும் இதர பகுதிகள் மோசடியாக தயாரிக்கப்பட்டவையாக உள்ளன.
இவற்றை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. ஸ்கேன் செய்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வங்கிகளில் இவை நடைமுறை சாத்தியமில்லாதது.
பாரத ஸ்டேட் வங்கி தென்காசி கிளையில் எங்கள் சங்க உறுப்பினா் என்.சங்கா் பணிபுரிந்து, உடல்நலக் குறைவு காரணமாக பணியிலிருந்து நிறுத்தப்பட்டாா்.
அவா் பணியில் இருந்த போது போலி நகைகளை அடமானம் வைத்த நபா்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.