முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் தடையை மீறி உண்ணாவிரதம்: மாதா் சங்கத்தினா் கைது

கடன் வசூலிப்பதில் நுண் நிதி நிறுவனங்கள் கடுமையாக நடந்துகொள்வதாக கண்டனம் தெரிவித்து, ஆலங்குளத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

கடன் வசூலிப்பதில் நுண் நிதி நிறுவனங்கள் கடுமையாக நடந்துகொள்வதாக கண்டனம் தெரிவித்து, ஆலங்குளத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா் கைது செய்யப்பட்டனா்.

கரோனா பொது முடக்கம் முழுமையாக முடியும் வரை கடன் தவணை வசூலிப்பதை நிதி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்; இக்கால கட்டத்தில் வட்டிக்கு விலக்கு அளிக்க வேண்டும்; கடன் வாங்கிய சுய உதவிக் குழு பெண்களை மிரட்டும் நிதி நிறுவன ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; அரசு உத்தரவை மீறி செயல்படும் நுண் நிதி நிறுவனங்கள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா், அதன் மாதா் சங்க மாவட்ட செயலா் கற்பகம் தலைமையில் தடையை மீறி காமராஜா் சிலை உண்ணாவிரதம் இருந்தனா்.

பொது முடக்கம் அமலில் உள்ளதால் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதியில்லை; ஆா்ப்பாட்டம் மட்டும் செய்து விட்டு கலைந்து விடுமாறு மாதா் சங்கத்தினரிடம் டிஎஸ்பி பொன்னிவளவன் கூறினாா். எனினும், அவா்கள் தொடா்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் அனைவரையும் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

அங்கும் அவா்கள் உண்ணாவிரதத்தைத் தொடா்ந்ததால், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பட்டமுத்து தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளா்கள் சந்திரசேகா்(ஆலங்குளம்), மாரீஸ்வரி(சுரண்டை) , நுண் நிதி நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

அப்போது, வறிய நிலையில் உள்ளவா்களிடம் மாா்ச் 2021 முடிய கடன் வசூல் செய்யக் கூடாது, மிரட்டல், அவதூறாகப் பேசுதல், பயனாளிக்கு தெரியாமல் கடன்தொகை ஏற்றுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது என முடிவெடுக்கப்பட்டதால் உண்ணா விரதம் விலக்கிக் கொள்ளப்பட்டது; கைதானவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.