திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு திறன்சார் கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கருணா பவுண்டேசன் மற்றும் ரோட்டரி கிளப் , சென்னை கேப்பிடல் ஆகியவற்றுடன் இணைந்து கல்லூரி நல மையத்தின் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கான திறன்சார் கணினி பயிற்சி மையம் தொடக்க விழா ராணிஅண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் சி.வி.மைதிலி தலைமை வகித்தார். கல்லூரியின் மாற்றுத்திறனாளிகள் நல மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலம்மாள் வரவேற்றார். திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி எப்.சாந்திகுளோரி எம்ரால்டு சிறப்புரையாற்றினார். சோயா நிறுவனர் எஸ்.என்.சரவணன் வாழ்த்திப் பேசினார்.
திறன்சார் கணினி பயிற்சி மையத்தின் செயல்பாடுகளை கருணா வித்தியா பவுண்டேசன் செயலர் ரகுராமன் விளக்கினார். சென்னையில் உள்ள "ஹெல்ப் த ப்ளைன்ட் பவுண்டேசன்' சார்பில் பார்வையற்ற மாணவிகள் 16 பேருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை பாரத ஸ்டேட் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் சுரேஷ் வழங்கினார். ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் மாற்றுத் திறனாளி நல மையத்தின் செயல்பாடுகளை வி. டார்லிங் செல்வி விளக்கினார். இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.