முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களில் உடைப்பு ஏற்படும் அபாயம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களில் கரை பலமிழந்து காணப்படுவதால், தற்போதைய மழைக்கு

Updated On : 5 நவம்பர் 2018, 7:47 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களில் கரை பலமிழந்து காணப்படுவதால், தற்போதைய மழைக்கு அவற்றில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருநெல்வேலி கால்வாய், பாளையம் கால்வாய், கோடகன் கால்வாய், கன்னடியன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் ஆகியவற்றின் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இவை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாசன மடைகள் தூர்ந்து காணப்படுகின்றன. மேலும், ஆக்கிரமிப்புகளால் பாசனக் கால்வாய் கரை சுருங்கி  ஒற்றையடி பாதையாக மாறி வருகிறது. கால்வாய் கரையோரமாக இருக்கும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், மண்டபங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த கால்வாய்களில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதுதவிர, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகள் கால்வாய்களில் தேங்குவதால், அவை தனது அடையாளத்தை இழந்து வருகின்றன. 
இதனிடையே, மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் பருவ மழையால் தாமிரவருணிப் பாசனத்திலுள்ள கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேவேளையில்,  கார் பருவ அறுவடை நடைபெற்று வருவதால், பாசனத்துக்கு தண்ணீர் தேவையின்றி மதகுகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பலமிழந்து காணப்படும் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருநெல்வேலி நகரம் கரைக்காத் தோப்பு பகுதியில் அண்மையில் பெய்த மழையால் திருநெல்வேலி கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து உடையும் அபாயம் நிலவியது. இதையடுத்து,  அங்கு தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
எனினும், மழை தொடர்ந்து பெய்தால் மணல் மூட்டைகளும் அடித்து செல்ல வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்த கரையோர மக்கள்,  மழை நீர் ஊருக்குள் புகாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனிடயே,  பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், சுத்தமல்லி, சிவந்திபுரம், ஊர்க்காடு, கல்லிடைக்குறிச்சி, கரம்பை உள்பட பல இடங்களில் கால்வாய் கரைகள் உடைப்பு ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments