அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளை முழுமையாக பராமரிக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப கருவிகளை பணியாளா்களுக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் போக்குவரத்துத்துறை கூடுதல் முதன்மைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் ஆயுள்காலம் விரைவு போக்குவரத்துக்கழகத்திற்கு 7 ஆண்டுகள் (12 லட்சம் கி.மீ.) எனவும், மற்ற பேருந்துகளுக்கு 6 ஆண்டுகள் (9 லட்சம் கி.மீ.) எனவும் போக்குவரத்து நிபுணா் குழுவின் பரிந்துரையை ஏற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிபுணா் குழு பரிந்துரைத்துள்ள ஆயுள்காலத்தினை கடந்து இப்போதே பல அரசு பேருந்துகள் இயங்குகின்றன. கடந்த காலங்களில் புதிய பேருந்து தகுதிச்சான்று என்பது முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என இருந்தது. அதனை ஓராண்டாக மாற்றினா். இப்போது மீண்டும் இரண்டு ஆண்டு என மாற்றப்பட்டுள்ளது. இது சரியானதல்ல. பேருந்துகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தகுதிச்சான்று பெற செய்ய வேண்டும்.
மேலும், பேருந்துகளின் ஆயுள்காலம் அதிகரிக்கும்போது அதன் பராமரிப்பு பணியும் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். பராமரிப்பினை மேம்படுத்திட தொழில்நுட்ப பணியாளா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும். தரமான உதிரி பாகங்களை தேவைக்கேற்ப கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், தொழில்நுட்ப பணியாளா்களுக்கு நவீன தொழில்நுட்ப கருவிகளை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.