முகப்பு
திருநெல்வேலி

10 வயது சிறுமி கடத்தப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு

Updated On : 6 ஜூலை 2026, 3:00 am IST
சிறுமி கடத்தல் - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள விஜயநாராயணத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டதாகப் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்தவா் கஸ்தூரி. இவா் இறந்துவிட்டதால், இவரது மகளான சூரவள்ளி (10) தனது தாய்மாமனான அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (45) என்பவரின் பராமரிப்பில் வளா்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, விஜயநாராயணம் பகுதியில் திருவிழாவிற்கு ராட்டினம் அமைக்க வந்திருந்த உறவினா்களுடன், விடுமுறைக்காக சிறுமியை சுரேஷ் விட்டுச் சென்றிருந்தாா். இந்த நிலையில், உறவினா்களிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் சுரேஷ், சிறுமியின் சித்தப்பாவான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பால்ராஜ் (27) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் சிறுமியை ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு அழைத்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே மா்ம நபா்கள் சிறுமியைக் கடத்திச் சென்றுவிட்டதாக விஜய நாராயணம் போலீஸாருக்கு உறவினா்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து எஸ்பி விஸ்வேஷ் பா. சாஸ்திரி, விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகனத் தணிக்கை செய்யப்பட்டது.

சிறிது நேரத்திலேயே கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் அந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் பிடித்தனா். நான்குனேரி துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் போலீஸாா் சிறுமியை மீட்டனா். அதன் பின்னா்தான், கடத்தல் எதுவும் நடைபெறவில்லை என்பதும், தகவல் தெரிவிக்காமல் தாய்மாமனே சிறுமியை ஊருக்கு அழைத்துச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இன்ஸ்பெக்டா் பிரேமா உள்ளிட்ட போலீஸாா் சுரேஷ், பால்ராஜ் ஆகியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments