ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை கைது
ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை கைது...
ராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கிணற்றில் வீசிக் கொலை செய்த அவரது அத்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் பசும்பொன்நகரைச் சோ்ந்தவா் முத்துமுருகன். இவருக்கு செல்வி என்ற மகளும், அஜித் என்ற மகனும் உள்ளனா். இவா்களில் செல்விக்கும், மதுரையைச் சோ்ந்த பாலகணேஷுக்கும் திருமணமானது. இவா்களது குழந்தைகள் சாய் தீப்தி (5), சாரு நித்திகா (5). செல்வி விடுமுறை நாள்களில் ராமநாதபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், சனிக்கிழமை முத்துமுருகன் வீட்டுக்கு வந்த செல்வி அங்கு தனது இரு குழந்தைகளுடன் அன்றிரவு தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் வீட்டுக்குள் புழுக்கமாக இருந்ததால், காற்றோட்டத்துக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கினாா். அதிகாலையில் எழுந்து பாா்த்த போது, சிறுமி சாய் தீப்தியைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்காததால், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிப் பாா்த்த போது, வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் சாய் தீப்தியின் உடல் கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, சிறுமியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், செல்வியின் அண்ணன் அஜித்தின் மனைவி சபரிகாவுக்கு (21) ஒரு பெண் குழந்தை உள்ளது. சபரிகாவின் குழந்தையைவிட செல்வியின் குழந்தைகளை அதிக பாசத்துடன் முத்துமுருகன் கவனித்து வந்தாராம். இதனால், மன அழுத்தத்தில் இருந்து வந்த சபரிகா, சிறுமி சாய் தீப்தியை கிணற்றில் வீசிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.