தூத்துக்குடியில் துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
தூத்துக்குடியில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நியூ விங்ஸ் திட்டத்தின் கீழ் ரெடிங்டன் பவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற இம்முகாமை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, ரெடிங்டன் பவுண்டேசன் இயக்குநர் ராமரத்தினம், திருநெல்வேலி மண்டலத் தலைவர் முருகன், ரெடிங்டன் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முகாமின்போது, கண் பார்வை, ரத்தப் பரிசோதனை, இருதயநோய் பரிசோதனை, தோல் நோய் மற்றும் எலும்பு நோய் பரிசோதனை, இரைப்பை குடல் நோய் பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்பட்டது. மேலும், உயர் சிகிச்சைகள் தேவைப்படும் நபர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் நியூ விங்ஸ் திட்டத்தின்கீழ் இதுவரை 4,200 துப்புரவுப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 15,000 நபர்களின் விவரங்களும் சேகரித்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.