முகப்பு
தூத்துக்குடி

ஸ்டெர்லைட்  விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் பொது வாக்கெடுப்பு: தி. வேல்முருகன் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு முன்வர வேண்டும்

Updated On : 23 ஜனவரி 2019, 7:46 am IST
பகிர்:

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு முன்வர வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதுதான் தூத்துக்குடி மாவட்ட பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா? வேண்டாமா? என தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு நேர் எதிராக எந்தத் திட்டத்தையும் கொண்டுவரக் கூடாது. 
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க தொடர் முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதற்கான விலை வருகிற தேர்தலில் அதற்கு கிடைக்கும்.
தூத்துக்குடியில் நிலத்தின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் காற்றாலை அமைக்கவும், மின்கடத்தி அமைக்கவும் அனுமதிக்கக் கூடாது. தூத்துக்குடியில் மக்காச்சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கொடநாடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பணியில் இருக்கும் நீதிபதி ஒருவர் மூலம் நீதிவிசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர்கள் திட்டமிட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் இளைஞர்களை திரட்டி பேரணி நடத்த உள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.