சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்? அஸ்வின் கூறுவதென்ன?
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இந்த இரண்டு அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து...
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இந்த இரண்டு அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாதில் இன்று (மே 31) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளும் ஏற்கனெவே ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாதில் நடைபெற்றாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியைக் காட்டிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே கோப்பையை வெல்லும் எனப் பலரும் கருதுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணி அவர்களது சொந்த மண்ணான அகமதாபாதில் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளார்கள். அகமதாபாத் அவர்களது கோட்டையாக உள்ளதால், இறுதிப்போட்டியில் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகவும் வலுவாக உள்ளது. அந்த அணியில் நடப்பு சீசனில் புவனேஷ்வர் குமார் மற்றும் க்ருணால் பாண்டியா இருவரும் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர்.
அகமதாபாதில் விளையாடுவதால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடுகளம் குறித்து நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆர்சிபியைப் பொருத்தவரை, பந்துவீச்சு அல்லது பேட்டிங் எதுவாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும். பலரும் ஆர்சிபி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் எனக் கூறும் அளவுக்கு அந்த அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த தொடர் முழுவதும் அவர்கள் எப்படி விளையாடினார்களோ அதே போன்ற ஆட்டத்தை இறுதிப்போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் களமிறங்குகின்றன.