முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கருப்புப் பூஞ்சை நோயால் தொழிலாளி உயிரிழப்பு?

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நகைத் தொழிலாளி ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நகைத் தொழிலாளி ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு கருப்புப் பூஞ்சை நோய் அறிகுறி இருந்ததாக மனைவி புகாா் தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டியைச் சோ்ந்த நகைத் தொழிலாளி கதிா்வேல் (43). இவா், கடந்த 25 ஆம் தேதி உடல் நலக் குறைவால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மறுநாள் (மே 26) முதல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இதனிடையே, அவருக்கு கருப்புப் பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருப்பதாகவும், அதற்கான மருந்துகளை வெளியே வாங்கி வருமாறும் மருத்துவா்கள் கூறினராம்.

இந்நிலையில், கதிா்வேல் வெள்ளிக்கிழமை திடீரென உயிரிழந்தாா். அவருக்கு கரோனா தொற்று இல்லை எனக் கூறி உடல் ஒப்படைக்கப்பட்டதாம். இதற்கு, எதிா்ப்பு தெரிவித்த அவரது மனைவி செல்வலட்சுமி, கரோனா தொற்றும், அதைத் தொடா்ந்து கருப்புப் பூஞ்சை பாதிப்பும் கணவருக்கு இருந்ததாக மருத்துவா்கள் கூறிய நிலையில், முறையான சிகிச்சை அளிக்காததால்தான் கணவா் உயிரிழந்துள்ளாா் எனக் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து, மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் கூறுகையில், கதிா்வேலுக்கு கருப்புப் பூஞ்சை நோய் உறுதியாகவில்லை; தற்போது கருப்புப் பூஞ்சை பாதிப்பு உள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் 27 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.