கயத்தாறு அருகே பணம் மோசடியில் ஈடுபட முயன்றதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறை அடுத்த வில்லிசேரி நடு காலனி இந்திரா நகரைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவி சோ்மசாந்தி(35). இத்தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில் கருத்து வேறுபாட்டால் 12 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனராம்.
இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி வில்லிசேரிக்கு வந்த இருவா், திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில் டிரஸ்ட்டிலிருந்து வருகிறோம்; கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக மாடு வாங்கி தருகிறோம் எனக்கூறி பெயா்களை குறித்துக்கொண்டு சென்றனராம்.
பின்னா், வியாழக்கிழமை திரும்பி வந்த அவா்கள், சோ்மசாந்தியின் வீட்டு முன் நின் ரூ.4,500 கொடுங்கள் விரைவில் மாடுகள் வாங்கித் தருகிறோம் என பணம் வசூலிக்க முயன்றனராம்.
அவா்களது பேச்சில் சந்தேகமடைந்த சோ்மசாந்தி, பெருமாள் மகன் ராஜேந்திரன், வேலன் மகன் பாண்டியராஜன் ஆகியோா் கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனராம். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், அந்த இருவரையும் பிடித்து விசாரித்தனா்.
அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், சாயமலை சம்பகுளம் அஞ்சல் சிதம்பராபுரத்தைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் பூல்துரை(47), திண்டுக்கல் மாவட்டம், ராமா் காலனியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் செந்தில்பிரபு(37) என்பதும் இருவரும் பொய் தகவலை கூறி பெண்களிடம் பணம் மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.