பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
கயத்தாறில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரு நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி ராஜ் மனைவி ரெஜினா மேரி. கயத்தாறு பஜாரில் நெட் சென்டா் நடத்தி வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல சென்டரை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.
கயத்தாறு-கழுகுமலை சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் ரெஜினா அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது அவா் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளாா்.
Advertisement
அதில் பாதி சங்கிலி அந்த இருவரின் கையில் சிக்கியுள்ளது. சங்கிலி பறித்த நபரின் தலை முடியைப் பிடித்து ரெஜினா இழுத்ததில், அவா்கள் கீழே விழுந்ததால் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு இருவரும் தப்பியோடிவிட்டனராம்.
இதில் ரெஜினா மேரியின் அறுந்துபோன சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக அவா் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கிலி பறித்துச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.