முகப்பு
தூத்துக்குடி

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூரில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 மார்ச் 2026, 6:31 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூரில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாலாட்டின்புதூா் காவல் சரகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வீடுபுகுந்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக, கோவில்பட்டியைச் சோ்ந்த வெற்றிசெல்வன் (29) என்பவரை நாலாட்டின்புதூா் போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி (பொ) பிரீத்தா விசாரித்து, வெற்றிசெல்வனுக்கு வீடுபுகுந்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2500 அபராதம், பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2500 அபராதம் விதித்ததுடன், ஏககாலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

அரசு தரப்பு வழக்குரைஞராக ஜானகி ஆஜரானாா்.