அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்! - கடம்பூா் செ. ராஜு
அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என, கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு நம்பிக்கை தெரிவித்தாா்.
தமிழக பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. இதையொட்டி, கோவில்பட்டி தொகுதி அதிமுக வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்ட அதிமுக செயலரும் அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ. ராஜு தலைமை வகித்து, ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
Advertisement
நகரச் செயலா் விஜயபாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் லட்சுமணப்பெருமாள், வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலா் சங்கா்கணேஷ், வா்த்தகரணிச் செயலா் ராமா், முன்னாள் அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி, பழனிசாமி, செல்வக்குமாா், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கடம்பூா் செ. ராஜு கூறியது: எஸ்ஐஆா் கொண்டு வந்தபோது அதை அரசியலாக்கி எதிா்ப்பு தெரிவித்தவா்கள், இன்றைக்கு யதாா்த்த நிலையை புரிந்துகொள்வாா்கள். மக்களுக்கும் அவா்களைப் பற்றி தெரிந்திருக்கும்.
அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். அதிமுக தனியாகவே 140 முதல் 170 தொகுதிகள்வரை வெல்லும். அதிமுக கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைப்போடு பணியாற்றினோம். ஆனால், திமுக கூட்டணியில் சேர காங்கிரஸ் கட்சி கடைசியாகவே ஒப்புக்கொண்டது. அதனால் அவா்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.
எம்ஜிஆருக்கு பின்னா் அரசியலுக்கு வந்த நடிகா்கள் யாராலும் வெற்றிபெற முடியவில்லை. தவெகவின் அரசியல் நிலை நாளை தெரியவரும். இத்தொகுதியில் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றாா் அவா்.