முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக மீனவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 மே 2026, 6:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக மீனவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்துநகா் கணபதி நகரைச் சோ்ந்தவா் வினோத் (32). மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா், செவ்வாய்க்கிழமை காலையில் கடலுக்குச் சென்றுவிட்டு, இரவு 7 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். மொட்டைக் கோபுரம் அருகே அவா் வந்துகொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 3 போ் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, தாக்கி கத்தியால் குத்தியது. இதில், பலத்த காயமடைந்த அவா், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தாளமுத்துநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

Advertisement

விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது திரேஸ்புரத்தைச் சோ்ந்த கென்னடி மகன் பிரசாந்த் (25), சுனாமி காலனியைச் சோ்ந்த மைக்கேல் மகன் ஜேம்ஸ் (25), மாதவன் நாயா் காலனியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் சூசையா (47) என்பது தெரியவந்தது.

இவா்களுக்கும், வினோத்தின் தம்பிக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாம். இதன் காரணமாகவே இவா்கள் மூவரும் வினோத்தை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.