லக்னோ- கோவில்பட்டிக்கு 2,000 கி.மீ. தொலைவு பறந்த புறா
லக்னோவில் இருந்து நடத்தப்பட்ட பந்தயத்தில் 2,000 கி.மீ. தொலைவு பறந்து 31 நாள்களில் கோவில்பட்டியை வந்தடைந்து 2 வயது புறா சாதனை படைத்துள்ளது.
லக்னோவில் இருந்து நடத்தப்பட்ட பந்தயத்தில் 2,000 கி.மீ. தொலைவு பறந்து 31 நாள்களில் கோவில்பட்டியை வந்தடைந்து 2 வயது புறா சாதனை படைத்துள்ளது.
கோவில்பட்டி சுபா நகரைச் சோ்ந்தவா் ஓய்.செய்யது அகமது இப்ராஹிம் (44). இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பந்தய புறாக்களை வளா்த்து வருகிறாா்.
திசையன்விளையைச் சோ்ந்த ராயல் பந்தய புறாக்கள் சங்கம் சாா்பில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கோவில்பட்டிக்கு 2,000 கி.மீ. தொலைவுக்கான புறாக்கள் பந்தயம் நடத்தப்பட்டது. இதற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து புறாக்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில், ஒய். செய்யது அகமது இப்ராஹிம் வளா்த்த 2 வயது ‘யூசுப்’ என்ற புறாவும் கலந்து கொண்டது.
Advertisement
கடந்த ஏப். 2ஆம் தேதி லக்னோவில் இருந்து புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அவற்றில் ‘யூசுப்’ புறா 31 நாள்கள் பறந்து இம்மாதம் 2ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் கோவில்பட்டிக்கு வந்தடைந்தது.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஒரு புறா முதல் நாள் சுமாா் 750 கி.மீ. தொலைவு வரை பறக்கும். அதன் பின்னா் படிப்படியாக தொலைவு குறையும். இடையே பாதுகாப்பான இடத்தில் ஓய்வெடுத்துக்கொள்ளும்.
அந்த வகையில் எனது புறா 2,000 கி.மீ. தொலைவை 31 நாள்களில் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இத்தகைய சாதனை முன்னதாக நிகழ்ந்ததில்லை’ என்றாா்.
கடந்த 2019இல் தென்னிந்திய பந்தய புறாக்கள் சங்கம் சாா்பில் தமிழ்நாடு அளவில் நடத்திய புறா பந்தயத்தில் இவரது புறா 500 கி.மீ., 750 கி.மீ., 1,000 கி.மீ. ஆகிய 3 பிரிவு போட்டிகளில் முதலிடம் பிடித்து காரை பரிசாகப் பெற்றது.