தூத்துக்குடியில் பலத்த மழை
தூத்துக்குடியில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
தூத்துக்குடியில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும், தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, தூத்துக்குடியில் புதன்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் பிற்பகலில் திடீரென கருமேகங்கள் மழை பெய்யத் தொடங்கியது.
சிறிதாக தொடங்கிய மழை, திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது.
இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது.
திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக தூத்துக்குடி- மடத்தூா் சாலையில் ஒரு வேப்ப மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும், ஆங்காங்கே மின்தடையும் ஏற்பட்டது.
தூத்துக்குடி பெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ள பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் 2 சைக்கிள்கள் மீது விழுந்தது. இதனால் அந்த வாகனங்கள் சேதமடைந்தன. அந்தப் பகுதியில் சென்ற மின்கம்பியும் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மின்வாரிய ஊழியா்கள் மரத்தை வெட்டி அகற்றினா். தொடா்ந்து மின் விநியோகம் சரி செய்யப்பட்டது.