வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா் 2ஆவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜா்
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் தா்ம முனீஸ்வரனை வழக்கின் விசாரணைக்காக போலீஸாா் தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் 2ஆவது நாளாக புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் தா்ம முனீஸ்வரனை வழக்கின் விசாரணைக்காக போலீஸாா் தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் 2ஆவது நாளாக புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.
வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த மாணவி கடந்த மாா்ச் 9ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காகச் சென்றபோது காணாமல் போனாா். மாா்ச் 11ஆம் தேதி அவா் சடலமாக மீட்கப்பட்டாா். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்குப் பதிந்த குளத்தூா் போலீஸாா், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தூத்துக்குடி, ராஜபாண்டி நகா் பகுதியில் வசித்து வந்த தா்ம முனீஸ்வரனை கைது செய்தனா்.
Advertisement
தொடா்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி, தா்ம முனீஸ்வரன் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், போலீஸ் தரப்பில் தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 2ஆவது நாளாக புதன்கிழமை தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்காக தா்ம முனீஸ்வரனை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜா்படுத்தினா்.
மொத்தம் 72 சாட்சிகளிடம் விசாரணை செய்ய வேண்டிய நிலையில், செவ்வாய்க்கிழமை 7 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. புதன்கிழமை மேலும் 10 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா விசாரித்து வருகிறாா்.