டி. முருங்கப்பட்டி உயர்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படுமா?
துறையூர், செப். 20: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முன்னாள் முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்ட டி. முருங்கப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படுமா என்று இந்தப் பகுதி மக
துறையூர், செப். 20: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முன்னாள் முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்ட டி. முருங்கப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படுமா என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
டி. முருங்கப்பட்டி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 1956-ல் அப்போதைய முதல்வர் கே. காமராஜரால் திறக்கப்பட்டது. பின்னர், 1961-ல் இது உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு கல்வி பயில்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பச்சமலை, கொல்லிமலை கிராம மலைவாழ் மக்களின் குழந்தைகள்தான். இவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு மேல்நிலைக் கல்வி பயில சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அல்லது 5 கி.மீ. தொலைவுள்ள வைரிசெட்டிப்பாளையம் அல்லது 30 கி.மீ. தொலைவுள்ள துறையூருக்குத்தான் செல்ல வேண்டும். இதனால், வசதி இல்லாதவர்கள் பத்தாம் வகுப்புடன் நின்று விடுகின்றனர்.
இதுகுறித்து இப் பள்ளித் தலைமையாசிரியர் கூறியது:
ரூ. 2 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி பள்ளி மூலம் கருத்துரு அனுப்பினால், அரசு ஆய்வு செய்து மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கும். கூடுதல் வகுப்பறைகள் கட்ட போதுமான இட வசதியுள்ளது. தற்போதுகூட நபார்டு நிதியுதவியுடன் புதிய வகுப்பறைகள், சுற்றுச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 100-க்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 90 சத மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.
அரசு இப் பள்ளியைத் தரம் உயர்த்தினால் இந்தப் பள்ளியில் பயில்பவர்கள் மட்டுமன்றி, 3 கி.மீ. தொலைவில் உள்ள நாகநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்
பயில்பவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.
இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பல ஒன்றியப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படாமல் இருப்பது
இந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய அதிமுக அரசில் அமைச்சராக பதவி வகித்த சரோஜா இங்கு 1960-ல் படித்தவர் என்பதும், இவரைத் தவிர, இங்கு பயின்ற பலர் இன்று பொறியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தவும், இந்தப் பள்ளியில் அருகில் உள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.