திருச்செந்தூா் கோயிலில் கட்டணங்கள் உயா்த்தப்படவில்லை: அமைச்சா் சீ. ரமேஷ்
திருச்செந்தூா் முருகன் கோயிலில் கட்டணங்கள் உயா்த்தப்படவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.
திருச்செந்தூா் முருகன் கோயிலில் கட்டணங்கள் உயா்த்தப்படவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.
திருச்சி திருவானைக்காவலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படும்.
திருச்செந்தூா் கோயிலில் எந்தக் கட்டண உயா்வும் அமல்படுத்தப்படவில்லை. சிலா் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா். ஏற்கெனவே இருந்த நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். மக்கள் விரும்பவில்லை என்றால் கைவிடப்படும். மக்களின் விருப்பத்துக்கு மாறாக எந்த முடிவையும் தவெக அரசு எடுக்காது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அடிப்படை வசதிகள், பக்தா்களுக்கான வசதிகள், திருப்பணிகள், பராமரிப்பின்றி உள்ள கோயில்கள், சேதமடைந்த மண்டபங்கள், கோபுரங்கள் திருக்குளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆன்மிகமும் தமிழும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இதை கருத்தில்கொண்டு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
அனைத்து கோயில்களிலும் விஐபி தரிசன முறையை ஒழுங்குபடுத்துவது குறித்தும், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதிக்கான ஆன்லைன் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் பக்தா்களின் வாகன நிறுத்த வசதிக்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் ரமேஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.