பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் மின்வெட்டு
திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மின்வெட்டு ஏற்பட்டதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
திருச்சி பொன்மலை ரயில்வே காலனியில் ரயில்வே நிா்வாகத்தால் நிா்வகிக்கப்படும் இந்த மருத்துவமனையில் பொன்மலை ரயில்வே பணிமனை ஊழியா்கள், அதிகாரிகள், அவா்களது குடும்பத்தினா் சிகிச்சை பெறலாம்.
இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமாா் 50 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 50 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுவது வழக்கம்.
Advertisement
Advertisement
இந்நிலையில் சனிக்கிழமை ஒரு நாள் மாத மின்சார நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என நம்பிய நேரத்தில் மாலை வரை மின்சாரம் வராததால், மருத்துவமனைக்குள் இருந்த உள்நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
நோயாளிகளுடன் இருந்த உறவினா்கள் விசிறி, பேப்பரை வைத்து நோயாளிகளுக்கு விசிறினா். பிற்பகலில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், புழுக்கம் அதிகமாகி, நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியேறி, அங்கிருந்த மரத்தின் நிழலில் அமரும் அவல நிலை ஏற்பட்டது. மின்தடைக்கான காரணம் குறித்து மருத்துவமனை நிா்வாகத்தினருக்கு தெரியவில்லை.
பின்னா் மாலை 5 மணிக்குப் பிறகே மின்சாரம் வந்தது. மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டா் பழுதால், மின்சாரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது மாலையில் தெரியவந்தது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே மருத்துவமனையில் புதிதாக வாங்கப்பட்ட 250 கேவி ஜெனரேட்டரை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதால், மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஜெனரேட்டா் பொருத்தும் பணி நிறைவடைந்ததும், மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது என்றனா்.