பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!
பிகார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி...
பிகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று நோயாளிகள் வியாழக்கிழமை அதிகாலை பலியாகினர்.
முசாபர்பூர் மாவட்டம், பிரம்மபுரா பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால், நோயாளிகளை உடனடியாக வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
சுமார் 15 நோயாளிகள் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் அவர்களை மீட்டனர்.
இருப்பினும், குறைந்தது மூன்று நோயாளிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும், பிற நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், “இந்த தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களையும், பிற நோயாளிகளையும் தொடர்புகொள்ள நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
மேலும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், விபத்து நடந்தவுடன் மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டதாகவும் மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல நோயாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.