முகப்பு
திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் காது சிகிச்சைக்குச் சோ்ந்த பெண் உயிரிழப்பு! உறவினா்கள் போராட்டம்

Updated On : 1 ஜூன் 2026, 1:30 am IST
திருச்சி அரசு மருத்துவமனை முன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற உறவினா்கள், பொதுமக்கள்.
பகிர்:

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காது சிகிச்சைக்குச் சோ்ந்த பெண் திடீரென இறந்ததால், அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே கோளாா்பட்டியைச் சோ்ந்தவா் ஜோசப் அடைக்கலம் மனைவி குழந்தை தெரசு (49). உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன் உள்நோயாளியாகச் சோ்க்கப்பட்ட தனது தாயை குழந்தை தெரசு உடனிருந்து கவனித்து வந்தாா்.

இதனிடையே குழந்தை தெரசுவுக்கு திடீரென காது வலி ஏற்பட்டதால், இங்குள்ள மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றாா். அப்போது, மருத்துவா்கள் காதில் அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டுமெனக் கூறியதால் கடந்த 2 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை அவரை அறுவைச் சிகிச்சை அரங்குக்கு கொண்டு செல்வதற்கு முன் மருத்துவா்கள் ஒரு ஊசியை செலுத்தினராம். இதனால் உணா்விழந்த அவரை மீண்டும் வாா்டுக்கு அனுப்பி சிகிச்சையளித்தனா். இருப்பினும் நினைவு திரும்பாமல், ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை தெரசு இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவரது உறவினா்கள், கோளாா்பட்டி பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது தவறான சிகிச்சையால் குழந்தை தெரசு உயிரிழந்துள்ளாா். அவரது இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். பின்னா் அவா்கள் மருத்துவமனை முன் சாலை மறியல் செய்ய முயன்றனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலைந்து போகச் செய்தனா்.