அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைப் பறித்த 4 பெண்களைப் போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் விளந்தை சாவடி தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி(70). இவர், புதன்கிழமை காலை 9 மணியளவில் ஆண்டிமடம் நான்கு ரோட்டில் நகரப்பேருந்தில் ஏறினார். சிறிது நேரத்துக்கு பின்னர், பேருந்து பயணச் சீட்டு எடுக்க தனது கைப்பையைத் திறக்க குனிந்தபோது, தனது கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்கச்சங்கிலி திருடு போயிருப்பது கண்டு சப்தமிட்டார். இதையடுத்து, நடத்துனர் ஜயங்கொண்டம் நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து போலீஸார் இதுகுறித்து தெரிவித்தார். போலீஸார், பேருந்தில் ஜெயலட்சுமியிடம் சந்தேகத்திற்கிடமாக இடித்துச் சென்ற 4 பெண்களைப் பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து, பெண்கள் 4 பேரையும் ஜயங்கொண்டம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், அந்த பெண்கள் நால்வரும் ஏர்வாடியைச் சேர்ந்த ரவி மனைவி சுப்பு (37), ராஜா மனைவிகள் ராணி (25), ரம்யா (36), சுரேஷ் மனைவி இசக்கியம்மாள்(26) என்பது தெரியவந்தது.