வேலாயுதம்பாளையத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, வேலாயுதம்பாளையத்தில் புகழூர் தீயணைப்புத்துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்தும், கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது மற்றும் லாரி, பேருந்து ஓட்டுநர்கள் காற்று ஒலிப்பானை உபயோகப்படுத்தக் கூடாது என்பன குறித்தும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
புகழூர் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று, வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பயணிகள் படியில் நின்று பயணம் செய்யக் கூடாது . வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது. இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்துதான் வாகனத்தை ஓட்டவேண்டும். கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். அனைத்து வாகன ஓட்டுநர்களும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது. சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றக் கூடாது. வெடிமருந்து மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை அனுமதியின்றி எடுத்துச் செல்லக் கூடாது. இரவு நேரங்களில் கனரக வாகனங்களை பாதுகாப்பு இல்லாத இடங்களில் நிறுத்தக் கூடாது. குடிப்போதையில் வாகனத்தை ஓட்டக் கூடாது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை ஓட்டுநர்களிடம் தெரிவித்தனர். முன்னதாக, தீயணைப்பு நிலையத்தில் இருந்து புகழிமலையைச் சுற்றி இருச்சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தவாறு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.