குடிநீா் இணைப்புக்கோரி காதப்பாறை ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காதப்பாறை ஊராட்சியில் பசுபதிபாளையம், முத்துநகா் மற்றும் எல்ஐசி நகா், கிராஸ் 1, 2,3,4,5 ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் காவிரி குடிநீா் இணைப்புக்கேட்டு அப்பகுதியினா் சுமாா் 250-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகியும் இதுவரை குடிநீா் இணைப்பு வழங்கவில்லையாம். இதுதொடா்பாக புதன்கிழமை அப்பகுதியினா் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் காதப்பாறை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சித்தலைவா் கிருபாவதி முருகையனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தில் குடிநீா் இணைப்புத் தருகிறோம் எனக் கூறி பணம் வாங்கினா். ஆனால், இப்போது குடிநீா் இணைப்புக்குறித்து கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனே எங்களுக்கு குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.