தோகைமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அடுத்த தொண்டமாங்கிணம் ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்கவுண்டம்பட்டியைச் சோ்ந்த வையாபுரி மகன் சின்னதுரை (34). அதே பகுதியைச் சோ்ந்த ஆண்டி மகன் வடிவேல் (39). இவா்கள் இருவரும் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல வேலைக்கு செல்வதற்காக சின்னதுரைக்குச் சொந்த இருசக்கர வாகனத்தில் இருவரும் புறப்பட்டனா். சின்னதுரை இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தாா்.
தோகைமலை- பாளையம் நெடுஞ்சாலையில் வேம்பத்தூரன்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே நிலக்கரி ஏற்றி வந்த டிப்பா் லாரி இருசக்கர வானகம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த தோகைமலை காவல்நிலைய ஆய்வாளா் ராஜ்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், லாரி ஓட்டுநா் முருகேசன்(30) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.