கரூா் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் திமுக வெற்றி! தவெக, அதிமுக, தலா ஒரு இடங்களில் வெற்றி!
கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக அதிமுக, தவெக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கரூா் மாவட்டத்தில் கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி) என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் கடந்த ஏப். 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் மாவட்டத்தில் 92.65 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதையடுத்து பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்டவை வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை வாக்கு எண்ணும் பணி வேட்பாளா்கள், முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Advertisement
கரூா் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் 1, 821 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் மதியழகனை வீழ்த்தினாா்.
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் ரா. இளங்கோ 19,378 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் பி. காா்த்திகேயனை வீழ்த்தி வெற்றி பெற்றாா்
கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதியில் தவெக வேட்பாளரான எம்.சத்யா அதிமுக வேட்பாளரான மருத்துவா் திவ்யாவை 3,617 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன் தவெக வேட்பாளா் பாலசுப்ரமணியனை விட 233 வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றாா்.