தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக தலா 3 தொகுதிகளில் வெற்றி
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, தவெக தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தூத்துக்குடி தொகுதியில் மட்டும் முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் முன்னிலையில் இருந்து வந்தாா். மற்ற 5 தொகுதிகளிலும் முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வந்தன.
Advertisement
குறிப்பாக, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுக, தவெகவினரிடையே கடும் இழுபறி இருந்து வந்தது. முடிவில் திருச்செந்தூா், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது.
திருச்செந்தூா் தொகுதியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தொடா்ந்து 7ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா். வெற்றி பெறுவாா்கள் என்று அதிகம் எதிா்பாா்க்கப்பட்ட தூத்துக்குடி திமுக வேட்பாளா் பி. கீதா ஜீவன், கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு, ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோா் வெற்றி வாய்ப்பை இழந்தனா்.
முதன்முதலாக பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட கோவில்பட்டி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி, தவெக வேட்பாளா்கள் தூத்துக்குடி ஸ்ரீநாத், ஓட்டப்பிடாரம் மதன்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சரவணன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.