கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில் இலக்கிய மன்ற நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலக வாசகர் வட்டத்தின்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலக வாசகர் வட்டத்தின் தமிழ்ச்சோலை இலக்கிய மன்றம் சார்பில், நூலக வாசகர்கள் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ந. மலர்கொடி பேசியது:இன்றைய விஞ்ஞான கண்டு பிடிப்புகளுக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க கால தமிழ் இலக்கியங்களே தடம் அமைத்துக்கொடுத்தன.
தொல்காப்பியம், திருக்குறள், பரிபாடல், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் அறிவியல் குறிப்புகளும், மருத்துவ குறிப்புகளும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இன்று, விஞ்ஞான அறிவியலின் வளர்ச்சி மிகவும் வேகமாக உள்ளது, அணு போன்ற அறிவியல் கண்டுப்பிடிப்புகளை மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்த முடியும். அதனால், அறிவியலை உலக நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார் அவர். அரியலூர் அரசு கலைக் கல்லூரி ஆய்வியல் நிறைஞர் பெ. ஜான்சிராணி தலைமை வகித்தார்.