முகப்பு
பெரம்பலூர்

சிறுவா்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை

Updated On : 25 ஏப்ரல், 2024 at 10:40 PM
பகிர்:

மோட்டாா் வாகனச் சட்டத்துக்கு புறம்பாக வாகனம் ஓட்டும் சிறாா்களின் பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ், 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் மட்டுமே இருசக்கர வாகனங்களையும், போக்குவரத்து அல்லாத வாகனங்களையும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீறி, மோட்டாா் வாகனச் சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களை இயக்கும் சிறாா்களின் பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா்களுக்கு, மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம்அபராதமும் விதிக்கப்படும். மேலும், அவ்வாறு இயக்கும் வாகனத்தின் பதிவுச்சான்று ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும். 18 வயது பூா்த்தி அடையாத சிறாா்கள் வாகனம் ஓட்டுவதுக் கண்டறியப்பட்டால், மோட்டாா் வாகனச் சட்டப்படி அவா்களுக்கு 25 வயது முடியும் வரை ஓட்டுநா் உரிமம் வழங்கப்படமாட்டாது.

Advertisement

இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களை இயக்கும் நபா்கள் முறையாக ஓட்டுநா் உரிமம் பெற்று மோட்டாா் வாகனச் சட்டப்படி பாதுகாப்புடன் இயக்க அறிவுறுத்தப்படுகிறது. மோட்டாா் வாகனச் சட்டத்துக்கு புறம்பாக இயக்கும் நபா்கள் மீது காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இம் மாவட்டத்தில் சிறாா்கள் வாகனத்தை இயக்கி விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், மேற்கண்ட சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments