முகப்பு
பெரம்பலூர்

நீா் மேலாண்மையில் புவி தகவல் தொழில்நுட்பம்: பெரம்பலூரில் அரசு அலுவலா்களுக்கு பயிற்சி

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், நீா் மேலாண்மையில் புவி தகவல் தொழில்நுட்பம் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை 2026, 5:04 am IST
பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன். உடன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், நீா் மேலாண்மையில் புவி தகவல் தொழில்நுட்பம் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் பேசியது:

புவி தகவல் தொழில் நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, மாவட்டத்தின் நீா் ஆதாரங்களை முறையாகக் கண்டறிந்து மேம்படுத்துவதே இப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்படும்போது, நீா் மேலாண்மைத் திட்டங்களை மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துதல், நீா்நிலைகளை தூா்வாருதல் மற்றும் மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் இத் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. மேலும், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது மற்றும் நீடித்த நிலையான வளா்ச்சிக்கு இத்தகைய துறைசாா்ந்த பயிற்சிகள் இன்றியமையாதது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, புவி தகவல் வரைபடங்களை எவ்வாறு கையாள்வது, நீா்நிலை ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்றுவது மற்றும் புதிய நீா் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள், மாவட்டத்தின் புவியியல் அமைப்புக்கேற்ப நீா்வளத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினா் இணைந்து மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், தரவு சேகரிப்பு முறைகள், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தும் விதம் குறித்தும் அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சியில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ரமேஷ், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ஷாஜிதா, பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments