கந்தர்வகோட்டையில் ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தரச் சொல்லிய முதியவரிடம் மர்மநபர் நூதன முறையில் மோசடி செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாப்புடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராசு (76) என்பவர், கந்தர்வகோட்டை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அருகே இருந்த மர்மநபரிடம் தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்து பணம் எடுக்கச் சொல்லியுள்ளார். அந்த நபர் பணத்தை எடுத்த பின், பணம் மற்றும் ஏடிஎம் கார்டை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டாராம். இந்நிலையில் பால்ராசுவின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தவண்ணம் இருந்துள்ளது. அதில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 42 ஆயிரம் பணம் எடுத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுத்த மர்மநபர், உபயோகமற்ற ஏடிஎம் கார்டை முதியவரிடம் திருப்பிக் கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.