புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ரூ. 75 லட்சத்துக்கு நூல்கள் விற்பனை!
புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் மொத்தம் ரூ. 75 லட்சத்துக்கு புத்தக விற்பனை நடைபெற்றதாக விழா வரவேற்புக் குழு தலைவர் தங்கம்மூர்த்தி தெரிவித்தார்.
புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் மொத்தம் ரூ. 75 லட்சத்துக்கு புத்தக விற்பனை நடைபெற்றதாக விழா வரவேற்புக் குழு தலைவர் தங்கம்மூர்த்தி தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் கடந்த பிப். 15 முதல் 3 ஆவது புத்தகத் திருவிழா நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் வரவேற்புக் குழு தலைவர் தங்கம்மூர்த்தி, மொத்தம் ரூ. 75 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாகத் தெரிவித்தார்.
நல் வாசகர் விருது: புத்தகத் திருவிழா நாட்களில் அதிக தொகைக்கு புத்தகங்கள் வாங்கிய நபர்கள் தினமும் மாலை நிகழ்ச்சியில் சிறப்பு செய்யப்பட்டனர். இருப்பினும் ஒட்டுமொத்தமாக அதிகமாக நூல்களை வாங்கியோருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் ""நல் வாசகர்'' விருதுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களில் ரூ. 58,361 க்கு நூல்களை வாங்கிய தமிழ்ராஜா, ரூ. 13,375 க்கு நூல்களை வாங்கிய ஆர். மகாநிவேதிதா, தனிநபரில் ரூ. 21980 -க்கு நூல்களை வாங்கிய சுந்தரபாண்டியன், கல்வி நிறுவனங்களில் ரூ. 22439 க்கு நூல்களை வாங்கிய கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும் நல்வாசகர் விருதுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் விருதுகளை வழங்கினார். வரவேற்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் நா. முத்துநிலவன் விருதுகளை அறிவித்தார்.
சிறந்த குறும்பட விருது: புத்தகத் திருவிழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினை ""தொலைத் தொடர்பு'' குறும்படத்துக்கு வழங்கப்பட்டது. படத்தின் இயக்குநர் மதுரையைச் சேர்ந்த ஆர்.எம். கார்த்தி இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார். அதிகம் விற்ற நூல்கள் பட்டியலில் சு. வெங்கடேசன் எழுதிய ""வேள்பாரி'', எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ""சஞ்சாரம்'', ச. மாடசாமி எழுதிய ""எனக்குரிய இடம் எங்கே?'' ஆகிய நூல்கள் முதல் 3 இடங்களைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.