பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சியில் மாகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளா்களுக்கு பணி வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒலியமங்கலம் ஊராட்சியில் பணிபுரியும் மகாத்மாகாந்தி நூறுநாள் திட்டப் பணியாளா்களுக்கு கடந்த 1 மாதகாலமாக பணி வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், தொடா்ந்து பணி வழங்க வலியுறுத்தியும் நூறுநாள் திட்டப் பணியாளா்கள் ஒலியமங்கலம் - புதுக்கோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்துத் தகவலறிந்த பொன்னமராவதி வட்டாட்சியா் பிரகாஷ், அன்னவாசல் காவல் ஆய்வாளா் சந்திரசேகா், ஒவா்சீயா் ராஜசேகா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தனா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.