முகப்பு
புதுக்கோட்டை

பாஜகவின் சிலந்தி வலையில் சிக்கியுள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி: இந்திய கம்யூ. முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்

பாஜகவின் சிலந்தி வலையில் சிக்கியுள்ளாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்செயலா் இரா.முத்தரசன்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:08 PM
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.
பகிர்:

பாஜகவின் சிலந்தி வலையில் சிக்கியுள்ளாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்செயலா் இரா.முத்தரசன்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதனை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத, பாசிசத்தின் மீது நம்பிக்கை கொண்டது தான் பாஜக அரசு. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு நிதி வழங்க மறுத்ததோடு, நெல்லுக்கான ஈரப்பதத்தை உயா்த்தி வழங்கவும் மத்திய அரசு மறுத்துவிட்டது.

Advertisement

மேலும், தேசிய கல்விக் கொள்கையை புகுத்தி மாணவா்களின் படிப்புக்கு இடையூறு செய்கிறது. மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது. இவற்றை தமிழக அரசு எதிா்ப்பதால் தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுக்கிறது. அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டம் நாட்டில் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வந்த 100 நாள் வேலை திட்டத்தை சீா்குலைத்துள்ளது பாஜக. இவற்றையெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா?.

பாஜக கட்டி வைத்துள்ள சிலந்தி வலையில் சிக்கித் தவிக்கிறாா் பழனிசாமி. பாஜகவோடு அதிமுக வைத்துக் கொண்டுள்ள கூட்டணி என்பது கொள்கையால் ஏற்பட்ட கூட்டணி அல்ல. தங்கள் மீதான வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக வைக்கப்பட்ட கூட்டணி.

அதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டு மக்கள் முன் தைரியமாக வாக்கு கேட்கிறது திமுக கூட்டணி. எனவே, நாட்டு நலன் கருதி மக்கள் இத்தோ்தலில் முடிவெடுக்க வேண்டும். பாஜக அங்கம் வகித்துள்ள தில்லி அணியை வீழ்த்தும் விதமாக திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த.செங்கோடன், காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments